சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை மாநகராட்சி இணைந்து தேசிய கண்ணொளி திட்டத்தின் கீழ், கண்தான விழிப்புணர்வு குறித்த இருவார விழா கடந்த 25ம் தேதி முதல் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், கண்தானத்தின் முக்கியத்துவம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தலைமையில், துணை முதல்வர் சுகுணாபாய், ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் ரமேஷ், கண் மருத்துவப் பேராசிரியர் சமரபுரி, மருத்துவர் இந்திரா, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு திட்ட மேலாளர் மருத்துவர் சிவக்குமார் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறுகையில், ‘இந்த கருத்தரங்கில் மருத்துவ மாணவர்களிடையே கண்தான விழிப்புணர்வு குறித்து கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எந்த வயதிலும் கண்தானம் செய்ய முன்வரலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சியில் 80 வயதை கடந்த ஓய்வு பெற்ற இரண்டு பேராசிரியர்கள் கண்தானம் செய்ய முன்வந்து படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். கண்தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,’ என்றார்.