சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் வேளாண்மையில் புத்தாக்கம் ஏற்படுத்தி நிலையான உயர் வளர்ச்சி அடைவதற்கு தமிழக முதல்வர் முத்தான மூன்று பத்தாண்டு தொலைநோக்கு திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு வழங்கியுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பயிரிடச்செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடி பரப்பான 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும். 10 லட்சம் எக்டர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது 20 லட்சம் எக்டராக உயர்த்தப்படும்.
உணவுதானியங்கள் தேங்காய், பருத்தி,சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் உற்பத்தித்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும். நிகர சாகுபடி பரப்பினை தற்போதுள்ள 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரித்திடும் விதமாக, தரிசு நிலங்களை சீர்செய்து, பண்ணைக்குட்டைகள், கசிவுநீர்க்குட்டைகள், தடுப்பணைகள், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீர் ஆதாரத்தை பெருக்கி, பத்தாண்டுகளில் தற்போது தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துப்பயிர்கள், பருத்தி, காய்கறி மற்றும் பழப்பயிர்களை கூடுதலாக சாகுபடிக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தற்போதுள்ள 10 லட்சம் எக்டர் இருபோக சாகுபடி பரப்பினை, பத்தாண்டுகளில் 20 லட்சம் எக்டராக அதிகரித்திட புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கியும், பெருமளவு நுண்ணீர்பாசன தொகுப்புகளை உருவாக்கியும், குறுகியகால சிறுதானிய பயிர்கள், நெல் தரிசில் பயறு வகைப்பயிர்கள், பருத்தி, எண்ணெய்வித்துப்பயிர்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் சாகுபடியினை ஊக்குவித்து செயல்படுத்தப்படும் என்றார்.