×

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழக்கு மாணவர் சேர்க்கை, பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (எம்.பி.சி.) 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடரப்பட்டன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த 1983ம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

 இந்நிலையில், வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் ஏற்கனவே சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய சாதிகளை அடையாளம் காண்பது, பட்டியலில் சேர்ப்பது போன்றவற்றிற்கு குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரமில்லை.

 பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர், மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் 10.5 சதவீதம் அளிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு உள்ளதால் கல்வியில் தனி இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க வேண்டும்.  தற்காலிக மாணவர் சேர்க்கை என்று எதுவும் இல்லாததால், இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 20 சதவீதத்தையே பின்பற்ற வேண்டும். பணி நியமனத்தை பொறுத்தவரை, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற முயற்சி நடந்துள்ளதால், ஆரம்ப நிலையில் தடை உத்தரவு கோர முடியாது என்று கூற முடியாது.

சில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. மற்ற நிறுவனங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. ஆகையால், இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அதேநேரத்தில், 10.5 சதவீத சட்டத்தால் பலன் அடைந்தவர்களுக்கு இந்த வழக்கு பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இறுதி  விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Tags : Chennai High Court , Reservation Case, Student Admission, Appointment, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...