ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி மருத்துவ செவிலியர்கள் மற்றும் என்சிடி பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தொண்டு நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெரியபாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவ செவிலியர்கள், என்சிடி பணியாளர்கள் என 250 பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், வக்கீல் சீனிவாசன், வி.பி.ரவிக்குமார், மொய்தீன், டி.கே.முனிவேல், இளைஞரணி அமைப்பாளர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.