சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று விடுமுறைக்கு பிறகு இந்த கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் மாணவ- மாணவியர் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நேற்று இறுதி நாள் என்பதால், நேற்று மாலை வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 171 மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 774 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 533 பேர் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணைய தளம் மூலம் ரேண்டம் எண்கள் வெளியாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.