×

வியாசர்பாடியில் நள்ளிரவு பயங்கரம் பிரபல ரவுடி வெட்டி படுகொலை: 4 ஆண்டு காத்திருந்து பழிக்குப்பழி; 8 பேர் கும்பல் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் பழிக்குப்பழியாக பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி ஜேஜேஆர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரி (44). அதே பகுதியில் சாமியானா போடும் வேலை செய்து வந்தார். இவருக்கு பவானி என்ற மனைவியும், 2 பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஹரி தனது வீட்டின் வெளியே அமர்ந்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் கத்தியால் ஹரியை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரி அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்குள் சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கும்பலை வெட்ட பாய்ந்தார். ஆனால் கும்பல், ஹரியை சரமாரி வெட்டிவிட்டு தப்பியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓட்டம் பிடித்தனர்.

படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கினார்.  ஹரியின் தம்பி ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஹரியை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரி, இன்று அதிகாலை 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார்  அம்பத்தூர் அருகே பதுங்கியிருந்த 8 பேர் கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ், பிரவீன், அஜித், சங்கர், வாசு, சஞ்சய், கணேஷ் குமார், தமிழ் என்பது தெரியவந்தது.

மேலும் வெட்டி கொல்லப்பட்ட ஹரிக்கும், வியாசர்பாடியில் பிரபல ரவுடியாக வலம் வந்த பப்லு என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பப்லு, ஹரியிடம் மாமூல் கேட்டு தகராறு செய்து ஹரியை வெட்டியுள்ளார். இதற்கு பழிவாங்குவதற்காக 2017ம் ஆண்டு ஹரி மற்றும் அவரது மகன் லாரன்ஸ் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் விடுதியில் தங்கியிருந்த பப்லுவை வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக பப்லுவின் கூட்டாளிகளான சந்தோஷ் உள்ளிட்ட பலர் ஹரியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி நேற்றிரவு ஹரியை வெட்டி கொலை செய்துள்ளனர். கிட்டத்தட்ட  4 வருடங்கள் காத்திருந்து பப்லுவின் கூட்டாளிகள் ஹரியை கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட  ஹரி மீது 2 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்  காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடியை 8 பேர் கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Midnight ,Cut ,Vyasurb , Vyasarpadi, midnight, Rowdy cut, massacre
× RELATED நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்