×

நாட்டின் மிக உயரமான மூலிகை தோட்டம் திறப்பு: உத்தரகாண்டுக்கு புது பெருமை

டேராடூன்: இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம், உத்தரகாண்ட் மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது சமோலி மாவட்டம். இந்தியாவின் கடைசி கிராமமான மணா என்ற பகுதி இங்குதான் அமைந்துள்ளது. இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் உள்ளது. புகழ் பெற்ற பத்ரிநாத் கோயிலும் இதன் அருகில்தான் உள்ளது. இதுபோல், பல்வேறு முக்கியத்துவம் கொண்ட மணாவில் மூலிகைத் தோட்டம் அமைக்க உத்தரகாண்ட்  அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அதன்படி, ஒன்றிய அரசு நிதி உதவியின் கீழ், இந்த கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.   

‘இந்த மூலிகைத் தோட்டம் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதால், இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம் என்ற பெருமையை இப்பூங்கா பெற்றுள்ளது. பல்வேறு அபூர்வ மூலிகைகளை கொண்டு 4 பிரிவுகளாக பூங்கா அமைந்துள்ளது. குறிப்பாக, இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் பகுதியில் கிடைக்கும் 40 வகையான மூலிகைகள் இங்கு நடப்பட்டுள்ளது. ஆன்மிகமும், அறிவியலும் கொண்ட பத்ரி துளசி, போஜ்புத்ரா மரங்கள் போன்றவையும் இங்கு பராமரிக்கப்படுகின்றன,’ என்று மூத்த வன பாதுகாப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Uttarakhand , The tallest herb garden, Uttarakhand,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்