காஜியாபாத்: கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக உத்தரபிரதேசம் சென்ற சென்னை அரிசி வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை போன விவகாரத்தில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கஜ்ராஜ் சிங்கின் மகன் சத்யேந்திர சிங் உட்பட 11 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் எஸ்எஸ்பி பவன் குமார் கூறுகையில், ‘கடந்த 17ம் தேதி சென்னையை சேர்ந்த அரசி வியாபாரி ஆனந்த் என்பவரிடம் கும்பல் ஒன்று ரூ. 45 லட்சத்தை கொள்ளையடித்தது.
இவ்வழக்கில் ஹபூர் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கஜ்ராஜ் சிங்கின் மகன் சத்யேந்திர சிங், ஆந்திராவை சேர்ந்த வினய் தேஜா (26), தீபக் பால்டா, ஆஷீஷ், சுரேந்திர பால், ஆயுஷ், விஷால், மனோஜ், ஹபூரின் ராஜீவ் தியாகி, அரவிந்த் தியாகி மற்றும் அவரது மனைவி ரீனா தியாகி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். அரவிந்த் தியாகியிடம் இருந்து ரூ.32 லட்சம், சத்யேந்திராவிடம் இருந்து ரூ.1.3 லட்சம் மீட்டுள்ளோம். மேலும், இவர்களிடம் இருந்து மூன்று கைத்துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் வினாஜ் தேஜா என்பவர், கறுப்பு பணத்தை (ஹவாலா) வெள்ளைப் பணமாக மாற்றித் தருவதாக கூறி சென்னையை சேர்ந்த அரிசி வியாபாரி ஆனந்த் என்பவரை குர்கானுக்கு அழைத்து வந்தார்.
அவரை, தீபக் பால்டா உள்ளிட்ட ஏழு பேரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த கும்பல் ஆனந்த் வைத்திருந்த பெரும் தொகையுடன் காஜியாபாத்தில் உள்ள ஏஜென்ட் அதுல் தியாகியிடம் அழைத்து சென்றது. இதற்கிடையில், ஐந்து பேர் கும்பல் ஒன்று, ஆனந்த் உள்ளிட்டோர் தங்கியிருந்த அறைக்குள் திடீரென நுழைந்து. துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ. 45 லட்சம் வைக்கப்பட்டிருந்த பையை அதிரடியாக பறித்துக் கொண்டு தப்பியது. தற்போது, ஹவாலா மோசடி கும்பல், பணம் பறித்த கும்பல் என்று 11 பேரை கைது செய்துள்ளோம். தொடர் விசாரணையில், டெல்லியில் உள்ள ஹவாலா புரோக்கரிடம் இருந்து அரிசி வியாபாரி ஆனந்த், கறுப்பு பணத்தை வௌ்ளையாக்கிய வகையில் ரூ. 1 கோடி பெற்றுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள ஹவாலா தரகரிடம் பணத்தை கொடுத்து, அவ்வப் போது மாற்றியுள்ளார். இதுதொடர்பாகவும், தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.