சென்னை: தனியார் நிறுவனத்துடன் இணைந்து திருமா பயிலகம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடத்தவுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா காலமான இன்றைய சூழலில் வேலைவாய்ப்பில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது தொற்றுப் பரவல் சற்று வீரியம் குறைந்துள்ளதால், தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. அந்த வேலைவாய்ப்புகளைப் பெற விளிம்பு நிலை சமூகத்தினருக்கு போதிய திறன் மேம்பாட்டு பயிற்சி தேவைப்படுகிறது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு பொறியியல் படித்து வேலைவாய்ப்புகளை தேடும் மாணவ, மாணவியரின் நலன் கருதி ‘திருமா பயிலகமும்’ ஃபார்வீவ் டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து ‘எம்பேடட் சிஸ்டம்’ சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் போது தகவல் தொழில்நுட்ப துறையில் எவ்வாறு வேலைவாய்ப்பினை பெறுவது என்ற பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.
அதன்படி, சிதம்பரம் ஜெயங்கொண்டத்தில், செங்குந்தபுரம் சாலையில் அமைந்துள்ள சக்தி மெடிக்கல் மற்றும் கல்வி அறக்கட்டளை கல்வி கூடத்தில், வரும் 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி (2.9.2021) வரையிலும், சென்னையில் அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் திருமா பயிலகத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.