மதுரை: மதுரை அருகே கண்மாய் மடையில் கி.பி.9, 13, 16ம் நூற்றாண்டை சேர்ந்த துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ளது வில்லூர். மதுரையை சேர்ந்த பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர், வில்லூர் கிராமப்பகுதியில் கள ஆய்வு செய்தனர். அப்போது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
இதுகுறித்து முனீஸ்வரன் கூறும்போது, ‘வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைந்துள்ளன. முதல் கண் மடை சுவர் பக்கவாட்டில் 1 அடி நீளம், அரை அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு, இரண்டாவது கண் மடை சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளன. இதனால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை. பெரிய கண்மாய் மூன்றாவது கண் மடையின் வலது புற சுவரில் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு உள்ளது.
இதில், ‘சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன்’ என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினை படியெடுத்து தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தபோது, எங்கே விஷம் தீண்டினாலும் குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும் என தெரிவிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இக்கல்வெட்டினை வேறு பகுதியில் இருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டு இருக்கலாம்’ என்றார்.