ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 19 வயது இளம்பெண் பெயரில், அவரது தோழிகளுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய திருவண்ணாமலையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே கடற்கரை பகுதியை சேர்ந்த 19வயது இளம்பெண்ணின் பெயரை பயன்படுத்தி தோழிகளின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தவர் மீது ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் சில நாட்களுக்கு முன் வழக்குபதிந்து விசாரித்து வந்தார். அப்பெண் பெயரில் அனைத்து பெண்களிடமும் பேசிய நபர் ஒரு கட்டத்தில் அதே தெருவில் உள்ள மற்றொரு பெண்ணிடம் பேசி திருமணமாகிவிட்டதா என கேட்டார்.
இதில் சந்தேகமடைந்த அப்பெண் உஷாரடைந்து, தன்னிடம் தொடர்பு கொண்ட பெண் பள்ளி தோழியல்ல என சக தோழிகளை உஷார்படுத்தினார். இது குறித்து அப்பெண் புகாரில் சைபர்கிரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதற்கிடையே, புகார் அளித்த பெண் தன்னிடம் பேசிய நபர் குறித்து சமூகவலைத்தளங்களில் தேடியுள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன் மகன் பீம்ராவ்(37) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பீம்ராவ் குறித்த போட்டோவை போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனடிப்படையில் போலீசார் பீம்ராவ் தான் 19வயது இளம்பெண்ணின் பெயரில், பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பியதை உறுதி செய்தனர்.
இதையறிந்த பீம்ராவ் செல்போனில் உள்ள தகவல்களை அழித்தார். போலீசிடம் புகார் அளித்தால் அனைவரின் அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என பெண்களை அவர் மிரட்டினார். தொடர்ந்து சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் திபாகர் தலைமையில் போலீசார் செங்கம் விரைந்து சென்று நேற்று பீம்ராவை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை மெரினா கடற்கரையில் அரிசியில் பெயர் எழுதும் தொழில் செய்து வந்த பீம்ராவ் முதல் மனைவி திவ்யா பிரிந்து சென்ற நிலையில் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து 2 வயது ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.