திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த உம்மன்சாண்டி ஆட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவர் சரிதாநாயர். சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி கேரளம், தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானவர்களிடம் கோடிணக்கில் பணம் மோசடி செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் காங்கிரஸ் எம்பி வேணுகோபால் உட்பட 6 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுதொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் உம்மன்சாண்டி மீதான புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்று குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சரிதாநாயர் கேரள டிஜிபியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னை பாலத்காரம் செய்ததாக கூறிய முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உள்பட 6 பேர் மீதான விசாரணையை போலீஸ் இழுத்தடிக்கிறது. எனவே சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக டெல்லி சென்று சிபிஐ உயர் அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். இதையடுத்து 6 பேர் மீதான வழக்கை சிபிஐ ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே உம்மன்சாண்டி உள்பட 6 பேர் மீது சிபிஐ திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நீதிமன்றங்களில் எப்ஐஆர் தாக்கல் செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.