சென்னை: மறைந்த ஒன்றிய அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக திகழ்ந்தவருமான முரசொலி மாறனின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தலைவர் கலைஞர் அவர்களால் ‘எனது கண்ணின் கருவிழி’ என அழைக்கப்பட்டு, ‘கலைஞரின் மனசாட்சி’ என கழகத்தினரால் போற்றப்பட்ட மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கக்கூடிய முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.கனிமொழி, திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, துரைமுருகன் மற்றும் எம்.பி. தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்தினர்.