பெங்களூரு: பெங்களூரு உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேகதாது குடிநீர் திட்டத்திற்கு தமிழகம் எவ்வளவு தடை ஏற்படுத்தினாலும் அதை நிறைவேற்றியே தீருவேன் என சுதந்திர தின விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரு மானக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் பேசியதாவது: பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது.
இதை முன்னிட்டு காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். இது முற்றிலும் குடிநீர் மற்றும் மின்சார தயாரிப்பிற்கான திட்டமாகும். காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திற்கு உரிய நீரை பயன்படுத்தும் வகையில் குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கான இத்திட்டத்திற்கு அண்டை மாநிலம் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. அதே நேரம் தமிழகம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழகத்திடம் இருந்து எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதை சமாளித்து அணை கட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.