ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கர தீவிரவாதியின் தந்தை, தேசியக்கொடியை ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திரத் தினத்தையொட்டி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வித் துறை உட்பட அனைத்துத் துறைகளும் தங்கள் அலுவலக வளாகத்தில் கொடியேற்றும் விழாவை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், புல்வாமா மாவட்டம், திராலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முசாபர் வானி என்ற ஆசிரியர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இவர், பாதுகாப்பு படையால் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கர தீவிரவாதியான பர்கான் வானியின் தந்தை ஆவார். கடந்த 2016ல் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் வானியும், மற்ற இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 22 வயதான வானி கொல்லப்பட்டதை எதிர்த்து காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இது 5 மாதங்கள் நீடித்தது. பல உயிர்களை இழந்தது. மேலும் பலர் காயமடைந்தனர்.