மஞ்சூர் : மஞ்சூர் எடக்காடு கூட்டுறவு நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு பகுதியில் குந்தா கூட்டுறவு தொழிற்சாலையில் சிறப்பு பேரவை கூட்டம் இணை இயக்குனர் (தேயிலை) அகிலா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 200 விவசாய அங்கத்தினர்கள் பங்கேற்றனர்.
இதில், விவசாய அங்கத்தினர்களின் கோரிக்கையை நிர்வாக தரப்பில் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அதிருப்தி அடைந்து கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து இணை இயக்குனர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அவரது நடவடிக்கையை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி தொழிற்சாலை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன் மஞ்சூர்-எடக்காடு இடையே ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மஞ்சூர் எஸ்ஐ ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்ட விவசாயிகள், தொழிற்சாலைக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மீண்டும் நடைபெற்ற கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படாததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,‘‘நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் இயக்குனர் ஒருவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ெசன்னையில் உள்ள தொழில்துறை ஆணையருக்கு ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், அங்கத்தினர்களின் கோரிக்கைக்கு நிர்வாக தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது.
இது குறித்து அனைத்து விவசாயிகளிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.