சென்னை: மூன்றாவது அலையை தடுக்கவும் இரண்டாவது அலையை பூஜ்யத்திற்கு கொண்டு வர பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொடர் விழிப்புணர்வும், கண்காணிப்பும் பொதுமக்களிடையே தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி போடாததே கொரோனா தொற்றினால் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பத்திரிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் தொடர் கவனக்குறைவு காரணமாக தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். கோவையில் காரமடை, பொள்ளாச்சி வடக்கு, துடியலூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொற்று அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் பொதுமக்கள் அதிக அளவில் போக்குவரத்தில் ஈடுப்பட்டுள்ளது தொற்று பரவலுக்கு காரணமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளார். கூட்டங்களில் தான் கொரோனா அதிகமாக பரவுகிறது. எந்த மதம் சார்ந்த கூட்டங்களிலும் கவனக்குறைவு ஏற்பட கூடாது என்றும், அபராதம் விதிப்பது மட்டும் இதற்கு தீர்வு அல்ல என்றும் மக்களிடம் மனமாற்றம் தேவை என்றும் ராதாகிருஷ்னன் வலியுறுத்தியுள்ளார்.
38 சதவீத மக்கள் மட்டுமே முகக்கவசத்தை முறையாக பயன்படுத்துகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் முறையாக பின்பற்றுகின்றனர். மருத்துவமனைகளில் பின்பற்றுகின்றனர். சமூக இடைவெளி என்பது அனைத்து மத ஆலயங்களிழும் அறவே கிடையாது. சாலையோர கடைகள் பகுதிகளில் 5 - 23 சதவீத மக்களே முகக்கவசம் அணிகின்றனர். மால்களில் முகக்கவசம் முறையாக அணிகின்றனர். கைகழுவும் வசதி 54% மட்டுமே முழுமையாக வைத்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் பங்கேற்ற கூட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.