×

எஸ்.பி. வேலுமணியை கைது செய்யக்கோரி போராட்டம்

கான்டிராக்டர் ஆபீசில் ரெய்டு
அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் கான்டிராக்டர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. சென்னை மாதவரம் பால்பண்ணை பேங்க் காலனி 1வது தெருவில் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான கட்டிட கான்டிராக்டர் தாமஸ் அய்யாதுரை என்பவரின் அலுவலகத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு 2 கார்களில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். பின்னர், அய்யாதுரையை வரவழைத்து அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்தம் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சோதனையின்போது சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தார் நிறுவனத்தில்
அதிகாரிகள் சோதனை
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, திருமங்கையாழ்வார்புரம், நைனாகூறு ஏரி அருகேயுள்ள கேசிபி தார் பிளான்ட் என்னும் இடத்தில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை மற்றும் லதா தலைமையில் 10 அதிகாரிகள் குழு நேற்று காலை 7 மணி முதல், பிற்பகல் 2.45 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அங்கு, ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த, அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோதும் இந்நிறுவனம் டெண்டர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சி உதவி
செயற்பொறியாளர்
வீட்டில் ரெய்டு
கோவை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார். இவர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

எஸ்.பி. வேலுமணியை
கைது செய்யக்கோரி போராட்டம்
தமிழக மக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊழல் வழக்கில் கைது செய்ய வேண்டும் ௭ன வலியுறுத்தி தலித் விடுதலைக்கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ், தலைமை நிலையச்செயலாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

தொண்டர்களுக்கு
ரோஸ்மில்க், தோசை
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இது குறித்து தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். இதில், பலர் தலா ரூ.300 கொடுத்து அழைத்து வரப்பட்டனர். இவர்கள், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவ்வப்போது கோஷங்களை எழுப்பி வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு காலையில் டீ, காபி, ரோஸ்மில்க், தோசை, பொங்கல், வடை, மதியம் உணவு ஆகியவை அதிமுகவினர் சார்பில் வழங்கப்பட்டது. இதனை அவர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர், மீண்டும் கோஷங்களை எழுப்பினர்.


Tags : S.P. Struggle ,Velumani , S.P. Velumani, arrest, struggle
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...