கொடைக்கானல்: குடும்பம் என்றாலே மாமியார், மருமகள் பிரச்னை தீராத தலைவலியாக நீடித்து வருகிறது. பெரும்பாலும் இருவருக்குமே ஒத்துப் போவதில்லை. இவர்களை சமாளிக்க முடியாமல் இடையில் மாட்டிக் கொண்டு மண்டை காய்வது ஆண்கள்தான். இந்நிலையில் மாமியார், மருமகள் சண்டையை தீர்ப்பதற்கென்றே வினோத கோயில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்தில் உள்ளது அட்டுவம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில்தான் மாமியார், மருமகள் சண்டையை தீர்க்கும் வினோத கோயில் உள்ளது.
இங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூஜை நடக்கும். அப்போது இந்த கோயிலை பற்றி அறிந்தவர்கள் அதிகளவில் வருவர். இந்த பூஜையில் பொங்கல் வைத்து மட்டுமே வழிபடுவர். அட்டுவம்பட்டி கிராம மக்கள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் முன்னொரு காலத்தில் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு மருமகள் ஒருவர் இந்த கிராமத்திற்கு வந்து விட்டார். அவரை சாந்தப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மாமியார் வந்தார். இங்கு இருவரும் அப்படியே கல்லாக மாறி விட்டனர். இவர்களை சாமியாக நாங்கள் வழிபட்டு வருகிறோம். குடும்ப சண்டை இருப்பவர்கள், குறிப்பாக மாமியார், மருமகள் பிரச்னை இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வருகிறார்கள்’’ என்றனர்.