பெங்களூரு: தனக்கு அளித்துள்ள சலுகைகளை உடனே திரும்ப பெறும்படி கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு முன்னாள் முதல்வர் கடிதம் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய எடியூரப்பாவை, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று சந்தித்து பேசினார். அமைச்சரவையில் இடம் கிடைக்காத அதிருப்தி எம்எல்ஏ.க்கள்,. அமைச்சரவையில் இடம் கிடைத்தாலும் விரும்பிய துறை கிடைக்காதவர்களின் அதிருப்தி தொடர்பாக அவருடன் பொம்மை ஆலோசனை நடத்தினார். பின்னர், எடியூரப்பா அளித்த பேட்டி வருமாறு:
கர்நாடகாவில் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். இது ஒன்றுதான் எனது லட்சியம். பாஜ.வை பலப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளேன். முதல்வர் பசவராஜ் பொம்மை எனக்கு அமைச்சருக்கான அந்தஸ்து அளித்துள்ளார். அமைச்சர்களை போன்று சிறப்பு மரபு மரியாதை, அலுவலகம் உள்ளிட்ட எதுவும் எனக்கு தேவை இல்லை. முதல்வர் பசவராஜ் பொம்மை எனக்கு அளித்துள்ள அனைத்து சலுகைகளையும் உடனடியாக வாபஸ் பெற்று கொள்ள வேண்டும் என்று கடிதமும் எழுதியுள்ளேன்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எனக்கு எவ்வித சிறப்பு பாதுகாப்பும் தேவை கிடையாது. மக்களுடன் மக்களாகவே இருக்க விரும்புகிறேன். சட்டப்பேரவைக்கு 2023ல் தேர்தல் நடைபெறும். இதில், தனி பெரும்பான்மையுடன் பாஜ வெற்றி பெறும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்துவேன். அதே நேரம், எனக்கு சிறப்பு பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து எதுவும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.