திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் 30 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் தேவாலையமாக பயன்படுத்தி வந்த இடத்தில் தீடிரென இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிரிவல பாதையில் இமானுவேல் ஜெப வீடு என்கிற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேவாலயம் இயங்கி வரும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு கிரிவல பாதை விரிவாக்கத்திற்காக தேவாலையத்தின் ஒருபகுதியை அகற்ற நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த இடம் காலி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் திடீரென இந்து அமைப்புகள் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டனர். இதற்க்கு கிறிஸ்தவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிலையை அகற்றுமாறு காவல்த்துறையினர் வலியுறுத்தியும் இந்து முன்னணியினர், மற்றும் பாஜகவினர் மறுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிலையை அகற்றும்படி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்தவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட சிலையை அகற்ற கூறி இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினருடன் வருவாய் கோட்டாட்சியர் இளவரசி பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் தீர்வு எட்டப்படாததால் இரவோடு இரவாக பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது. இந்து சமைய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தேவாலயம் கட்டப்பட்டிருப்பதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினார். மேலும் சிதிலமடைந்த பீடத்தை புதுப்பித்து வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாலயம் இயங்கி வந்த இடத்தில் தீடிரென பிள்ளையார் சிலையை வைத்துவிட்டு இடத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இந்துமுன்னணியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
அனுமதியின்றி சிலை வைத்தது தொடர்பாக இந்து அமைப்புகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.