புதுடெல்லி: டெல்லி நங்கால் கிராமத்தில் 9 வயது சிறுமி, சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அங்கிருந்த பூசாரி ராதே சியாம், சிறுமி தண்ணீர் தொட்டியில் இருந்த மின் ஒயரை தொட்டதால், இறந்து விட்டதாக கூறி, தாயின் சம்மதம் பெறாமலேயே சிறுமியின் உடலை எரித்துள்ளனர். தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சுடுகாட்டிற்கு வந்தனர். போலீசாரும் வந்து எரிந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூசாரி மற்றும் அவரது 3 நண்பர்கள் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பூசாரி ராதே சியாம்(55) உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘தலித் சிறுமியும் இந்தியாவின் மகள்தான்’ என குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படும் இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி இந்திய மகள்கள் என கூறிவரும் நிலையில், ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.