புதுடெல்லி: டெல்லியில் கடந்த மே மாதம் 4 தேதி இரவில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் சுசில்குமார் மற்றும் அவரது ஜூனியர் சாகர் தன்கார், அவரது இரண்டு நண்பர்கள் சோனு மற்றும் அமித் குமார் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுசில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் சாகர் தன்கார் மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் சாகர் தன்கார் உயிரிழந்தார். இது தொடர்பாக சுசில்குமார் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நேற்று தலைமை மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் சத்விர் சிங் லம்பா முன்னிலையில் போலீசார் தாக்கல் செய்தனர். இதில் சுசில்குமார் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது.