சென்னை: தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா, சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் கி வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ் அழகிரி, கோபாலகிருஷ்ணன், முத்தரசன் ஜிகே வாசன் உள்ளிட்டோரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். தமிழக மக்களுக்காக ஏரளாமான சமூக நீதி திட்டங்களை தந்த மாபெரும் தலைவர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க வந்திருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறோம் என்று அவர் வரவேற்றார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு நினைவுப் பரிசுகளை போர்த்தி வரவேற்றார். பின்னர், தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கலைஞர் அவர்களின் உருவப்படத்தின் கீழே “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 16ஆவது தலைவராக கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.