திருவள்ளூர்: குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிக்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒருவர் 2முறை மட்டுமே பதவி வகிக்க தகுதி முடிவும். ஆனால் தொடர்ந்து 2முறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்தவர்கள், அதற்காக அமைந்த படிவத்தில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 3 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 48, ஜே.என் ரோடு, திருவள்ளுர் - 602 00 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலத்தில் வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும், இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என கூறப்பட்டுள்ளது.