சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவரை கடந்த 2013ம் ஆண்டு கூலிப்படையினர் கொலை செய்தனர். இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதாடினார். சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.