×

சேலத்தில் கண்மூடித்தனமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது!: போலீசார் அதிரடி

சேலம்: சேலத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சேலம் அருகே மகுடஞ்சாவடி அடுத்துள்ள காலிக்கவுண்டம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சியானது நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அபினவ், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் தனிப்படை போலீசார் தற்போது விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான பெரம்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கார் ஓட்டுநர் சதீஷ்குமார் குடிபோதையில் இருந்ததாகவும் மேலும் அவருடைய நண்பர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார், அருண் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.

அச்சமயம் அவர்களுக்கு பின்னல் அதிவேகமாக வந்த கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதிவிட்டு சென்றது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை வீடியோ எடுத்த ஒருவர் இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Salem , Salem, accident, car driver arrested
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...