விருதுநகர் : விருதுநகர் நகராட்சி, ரோசல்பட்டி பாண்டியன் நகர், அல்லம்பட்டி, சிவஞானபுரம் ஊராட்சி, கூரைக்குண்டு ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கோழிக்கறி விற்பனை நிலையங்கள் உள்ளன. கோழிக்கறி கடைகளில் சேரும் இறக்கை மற்றும் குடல் உள்ளிட்ட கழிவுகளை கடையினர் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் கொட்டுகின்றனர்.
அந்த வகையில் விருதுநகர் போலீஸ் பாலம் முன்பாக தனியார் பள்ளி முன்பு, மல்லாங்கிணர் ரோட்டில் எஸ்எப்எஸ் பள்ளி அருகில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். மேலும், கோழி கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்கள், பன்றிகள், பறவைகளால் சாலைகளில் செல்வோர் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக அருகில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகளில் வசிப்போர் நிரந்தர அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு கோழி கழிவு மற்றும் குப்பையை குழிதோண்டி புதைக்க அல்லது நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட உரிய உத்தரவிட வேண்டும். மேலும் போதிய விழிப்பிணர்பு இன்றி, கோழி கழிவுகளை சாலைகளில் கொட்டும் கோழி விற்பனையாளர்களுக்கு அபாரதம் விதிக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.