பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்து பருவமழை பெய்ய துவங்கியது. குறிப்பாக, இந்த மாதத்தில் தொடர்ந்து சில வாரமாக கனமழை பெய்தது.இதனால் ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கொரோனாவால் குரங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையால் கடந்த 10ம் தேதி குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த சிலநாட்களாக இடைவிடாமல் விடிய விடிய தொடர்ந்து பெய்த கன மழையால், குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து 2 வாரத்துக்கு மேலாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகள் யாரேனும் தடையை மீறி செல்கின்றார்களா? என வனத்தறையினர் கண்காணித்து வருகிறார்கள். ஆழியாருக்கு வரும் பயணிகள் பலரும் குரங்கு அருவிக்கு வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் தடைவிதித்திருப்பதை கூறி திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.