சென்னை: அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவில் சுகாதார ஆய்வாளர் ஒருவரை நியமித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்புக்கான நிலையான வழிக்காட்டி நெறிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்தல் அவசியம்.
குறிப்பாக, பணியாளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தப் பின், அவர்களை நிறுவனங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியரை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதையும், மருத்துவ காப்பீட்டு கட்டாயமாக இருப்பதையும் உறுதி செய்தல் அவசியம். அதேபோல், 300 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள், சுகாதார ஆய்வாளரை சொந்த செலவில் நியமித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.