×

கிழக்கு கடற்கரை சாலையில் கார் கவிழ்ந்து விபத்து நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: பெண் இன்ஜினியர் பரிதாப பலி

* ஆண் நண்பர்கள் காயத்துடன் தப்பினர்
* மாமல்லபுரம் அருகே நள்ளிரவு பயங்கரம்

சென்னை: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவரது தோழியான அமெரிக்க பெண் இன்ஜினியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர்களுடன் வந்த ஆண்நண்பர்கள் 2 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலாக வலம் வந்த இவர், துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, கவலை வேண்டாம், நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இவர், அவ்வப்போது நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் இரவு நேர பார்ட்டிகளில் நண்பர்களுடன் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருவது வழக்கம். இவரது, தோழி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த வள்ளி ஷெட்டி பவானி (26). திருமணமாகி, கணவரை பிரிந்த இவர், அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து கடந்த வாரம் சென்னை வந்த இவர், சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார். இந்நிலையில், யாஷிகா ஆனந்த், வள்ளி ஷெட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களான சையது அமீது, ஆனந்த்ஜோய் ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு ஒரே காரில் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இரவு 11.30 மணி அளவில் இசிஆர் சாலை வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். யாஷிகா ஆனந்த் காரை ஓட்டியுள்ளார்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற இவர்களது கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி, சாலையில் கவிழ்ந்து சுமார் நூறு மீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது. இதில், வள்ளி ஷெட்டி பவானி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடிகை யாஷிகாஆனந்த்துக்கு காலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடன் இருந்த 2 ஆண் நண்பர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் 2 ஆண் நண்பர்களை மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பலியான வள்ளி ஷெட்டி பவானியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்கு பதிந்து, நடிகை யாஷிகா மது போதியில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதா, உடன் வந்த ஆண் நண்பர்கள் யார், இவர்கள் எங்கு சென்று சென்னை திரும்பினர் என விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரில் சத்தமாக பாட்டு போட்டு, 4 பேரும் ஆட்டம் போட்டபடி வந்ததாக கூறப்படுகிறது.

Tags : East Coast Road ,Yashika Anand ,Phathaba , East Coast Road, Accident, Actress Yashika Anand, Female Engineer
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!