திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு பகுதியில் நூதன முறையில் ஒரு மோசடி நடந்து வருகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் சிம்கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒருவர் போன் செய்துள்ளார். உங்கள் முகவரி தொடர்பான ஆவணங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டும். அதற்காக குறிப்பிட்ட எண்ணில் அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, வாடிக்கையாளர்கள் அதே எண்ணில் அழைக்கும் போது, ஆவணங்களை புதுப்பிக்க கட்டணமாக 10 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.இதை நம்பிய வாடிக்கையாளர்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளனர். மீண்டும் அவர்களை அழைத்த நபர் பணம் வரவில்லை.
ஒரு குறிப்பிட்ட ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதன்மூலம் பணம் அனுப்புங்கள் என்று கூறுவார். அதன்படி, ஆப்-ஐ டவுன்லோடு செய்தால் அடுத்த சில நிமிடங்களில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் பறிபோய்விடும். அந்த ஆப் மூலம் செல்போனில் பதிவு செய்யப்பட்டு வைத்துள்ள வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை திருடி பணத்தை எடுத்து விடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இதேபோல், கேரளாவில் ஏராளமானோர் பல லட்சம் பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இது போன்ற மோசடியை நம்பி ஏமாற வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.