சென்னை: வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து பிறப்பிக்கபட்ட உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவிற்கு வருமான வரிதுறையினர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதன்மூலம் பெற்ற தொகை 6 கோடியே 38 லட்சம் ரூபாயை வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி கடந்த 2014-2015 மற்றும் 2015-2016ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்வது குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் போதுமான அவகாசம் அளித்து நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரிதுறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், 2014-2015ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து 3 கோடியே 86 லட்சம் ரூபாயை வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை ஜூலை 15ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் தரப்பில் விளக்கமளிக்க போதுமான அவகாசம் அளிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த வழக்கில் வருமான வரிதுறையினர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரனையை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.