செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வுக்கு வரும் 28ம் தேதிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, அரசு இட ஒதுக்கீட்டில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணகள் கடந்த 2ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யவும் செங்கல்பட்டு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 9499055673 / 9962986696 என்ற தொலைபேசி எண் அல்லது இயக்குநர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு / முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பெரும்பாக்கம் ஆகியோரை நேரில் தொடர்பு கொள்ளலாம். இணையதளத்தில் பதிவேற்றத்திற்கான கடைசி நாள் வரும் 28ம் தேதி என கூறப்பட்டுள்ளது.