×

உளவு பார்க்கப்படுவதை தடுக்க நான் எனது போன் கேமராவை டேப் போட்டு ஒட்டியுள்ளேன் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா : பெகாசஸ் உளவு விவகாரத்தில் நாடாளுமன்ற குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த உள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒன்றிய அரசால் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மக்களவை உறுப்பினர் சசி தருர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலை குழு வரும் 28ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொளியில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி,தன்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதால் அரசியல் கட்சி தலைவர்களிடம் பேச முடியவில்லை என குற்றம் சாட்டினார். இதனை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கக் கோரிய அவர், உளவு விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் மம்தா பேசியதாவது, பெகாஸஸ் என்றால் என்ன ? ஏழைகளுக்கு பணத்தை செலவிடுவதற்குப் பதிலாக உளவு பார்க்க ஏராளமான பணத்தை செலவிடுகிறீர்கள். பி.எம்.கேர் நிதி எங்கே ? அதற்கு யார் பொறுப்பு ? தற்போது பெகாஸஸ் விவகாரம் பற்றி உங்களால் யோசிக்க முடிகிறதா ?நான் எனது போன் கேமராவை டேப் போட்டு ஒட்டியுள்ளேன்.ஏன் ? ஆடியோ, வீடியோ என அனைத்து வகையிலும் உளவு பார்க்கிறார்கள். அதை தடுக்கவே டேப்பால் ஒட்டியுள்ளேன்,என்றார்.    

அடுத்த வாரம் டெல்லி வரும் மம்தா, பெகாசஸ் விவகாரம் பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பெகாசஸ் உளவு விவகாரம் அடுத்த 15 நாட்களில் வேகமெடுக்கும் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். இந்த உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.   


Tags : Mamta Banerji , பெகாசஸ்
× RELATED டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட...