சென்னை: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 61வது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(43), மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வகுமார் கொரட்டூர் எல்லையம்மன் நகரை சேர்ந்த பிரகாஷ்(28) என்பவரிடம் ரூ.4 லட்சமும், தில்லை நகரை சேர்ந்த தியாகராஜன்(52) என்பவரிடம் ரூ.11 லட்சமும் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. மேலும், அவர் வாங்கிய கடனுக்கு அளவுக்கு அதிகமாக வட்டியும் கட்டியதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் இருவரும் கடை மற்றும் வீட்டை தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி மிரட்டினர்.
இந்நிலையில், நேற்று காலை செல்வகுமார் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வகுமார் இறப்பதற்கு முன்பு கடையில் எழுதி வைத்திருந்த கடிதத்தை கொரட்டூர் போலீசார் கைப்பற்றினர். அதில், கடனையும் வட்டியையும் கேட்டு பிரகாஷ், தியாகராஜன் இருவரும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். பிரகாஷிடம் வாங்கிய ரூ.4 லட்சத்திற்கு வாங்கிய கடனுக்கு ரூ.11 லட்சம் வரையும், தியாகராஜன் வாங்கிய ரூ.11 லட்சத்திற்கும் ரூ.33 லட்சம் வரை வட்டி கட்டி விட்டேன். இதற்கு மேல் என்னால் வட்டி கட்ட முடியாது. எனது சாவுக்கு அவர்கள் இருவர் தான் காரணம் என எழுதியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்து வட்டிக்காரர்கள் பிரகாஷ், தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர்.