சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி அடர்ந்த வனப் பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியை ஒட்டியுள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் முகாமிட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த காட்டுயானை அணையின் கரையோரத்தில் உள்ள வனப்பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை தீவனமாக உட்கொள்கிறது. கடந்த சில நாட்களாக காட்டு யானை தினமும் அணையின் கரையோர வனப்பகுதியில் நடமாடுவதால் அணைப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் பவானிசாகர் அணையின் கரையோர வனப்பகுதியில் உள்ள தார்சாலையில் பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.