வாலாஜாபாத்: வாலாஜாபாத் பஸ் நிலையம் பின்புறம் உள்ள இந்தியன் வங்கியில், பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்கின்றனர். இதனால், கொரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பஸ் நிலையம், ரயில் நிலையம், காவல் நிலையம், வங்கிகள் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத் பஸ் நிலையத்தின் பின் பகுதியில் இந்தியன் வங்கி செயல்படுகிறது.
இங்கு மாத சம்பளம், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கிராம மக்களுக்கு வங்கி மூலம் வழங்கப்படும் ஊதியம் உள்பட பல்வேறு பணிகளுக்காக சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். இதையொட்டி, இந்த வங்கியில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றப்படுவதில்லை. இதனால் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்தியன் வங்கிக்கு தினமும் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், வங்கி சார்பில் இங்கு வரும் மக்களுக்கு முறையான அடிப்படை வசதி செய்யவில்லை. இதையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், சமூக இடைவெளி இல்லாமல், மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வங்கி நிர்வாகம், அதனை கருத்தில் கொள்ளவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றும்படி எச்சரிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கவண்டும். இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினிகள் வழங்க வேண்டும். அதை செய்தால், எந்த நோயும், யாரையும் தாக்காமல் பிழைக்கலாம் என்றனர்.