×

தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் வாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் வாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது, அதிமுக என பிரதிநிதித்துவப்படுத்தி யாரையும் பேசவைக்கவும் வேண்டாம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இன்று கூட்டாக விடுத்த அறிக்கை: “எம்ஜிஆரால் அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அதிமுக. எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக தன்னுடைய இறுதிக் காலம்வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவும் அதே எண்ணத்தோடு இயக்கத்தையும், தமிழகத்தையும் வழி நடத்தி இருக்கிறார்.

அதைப்போலவே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த பாதையில் சிறிதும் தடம் மாறாமல் அரசியல் களத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகள் தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்ற போது அதைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் அங்கங்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம் போன போக்கில் ஊடக அறிக்கை தொடர்பாகவும், கட்சித் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுகின்ற விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

மேற்சொன்ன காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளும் செய்தித் தொடர்பாளர் கட்சியை சார்ந்தவர் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு யாரையும் வைத்துப் பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எனவே கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவும், அனுமதிக்க வேண்டாம் என்றும், வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம். இந்த முக்கியமான விவகாரத்தில் தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில் மேலான ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Tags : AIADMK no longer participates in TV and social media arguments: OBS, EPS joint statement
× RELATED ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதம்...