உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்தில் மைக்கேல் வாகன், கோலியா, கேன் வில்லியம்சனா என்ற விவாதத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கு இந்தியா தரப்பில் முகமது ஷமி, இந்திய பந்து வீச்சு நியூஸிலாந்தின் பந்து வீச்சை விட பிரமாதம் என்றார். இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளார். உமேஷ் யாதவ் கூறியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குச் சமமானது. இது பற்றி இஷாந்த், ரகானே கூறியது மிகச்சரி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையக் கைப்பற்றுவது உலகக்கோப்பையை வெல்வதற்குச் சமமானது.குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு இது நிச்சயம் உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்றதுதான். உலகக்கோப்பையில் லீக், நாக்-அவுட் சுற்றுக்கள் என்று ஆடி இறுதிக்குள் நுழைவோம், அதேபோல்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதும் உலகின் டாப் அணிகளை வீழ்த்துவதன் மூலமே முடியும். லாக்-டவுன் காரணமாக வீட்டிலிருந்தபடியே அனைவரும் பயிற்சி மேற்கொண்டோம். விரைவில் ஒரு அணியாக திரண்டு பயிற்சி மேற்கொள்ளும் போது பிணைப்பு ஏற்படும், பைனலுக்கு தயாராகி விடுவோம். தனிமைப்படுத்தலுக்குப் பின் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் மீண்டும் செல்லவிருக்கிறோம். இது மிகக் கடினமானது. அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு மட்டுமே செல்ல முடியும். இதற்கு மன தைரியமும் புத்துணர்ச்சியும் முக்கியம்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பலமா, பலம் இல்லையா என்று கூறுவது கடினம். ஏனெனில் உலகின் பல அணிகளில் திறமையான பவுலர்கள் இருக்கின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. தினமும் எங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார் உமேஷ் யாதவ்….
The post இந்திய வேகப்பந்து வீச்சும் சளைத்ததல்ல: உமேஷ்யாதவ் உறுதி appeared first on Dinakaran.