×

மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது. கர்நாடக மாநிலத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும். எனவே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழக அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும், கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, மேகதாது அணை பிரச்னை குறித்து விரிவான வகையில் விளக்கினார். ‘பெங்களூரு குடிநீர் தேவைக்காக இந்த அணை கட்டப்படுகிறது என்ற கர்நாடக அரசின் விளக்கம் ஏற்புடையது அல்ல. இத்திட்டத்தால் தமிழக விவசாயிகளின் நலன் மிகவும் பாதிக்கப்படும்.

எனவே தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது’ என பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ‘மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது’ என கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியபோது, ‘இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என உறுதிபட தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தநிலையில் மேகதாது அணை பிரச்னை குறித்து விரிவாக ஆலோசிக்க முதல்வர் தலைமையில் நாளை அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில், நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளும் பங்கேற்க உள்ளனர். அப்போது, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


Tags : Meghadau ,dam ,Chief Minister ,MK Stalin , All party meeting tomorrow to discuss Meghadau dam issue
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...