×

குந்தா பகுதியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பால் தொழிற்சாலைகளில் உற்பத்தி தீவிரம்

மஞ்சூர்: குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து  அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகின்றன. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது. கடந்த இரு மாதங்களாக குந்தா பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் சுறு,சுறுப்படைந்த பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக தற்போது தோட்டங்களில் தேயிலை மகசூல் படி, படியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தினசரி 25ஆயிரம் முதல் 30ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து காணப்படுகிறது.

இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் பசுந்தேயிலை வரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து தினசரி குறிப்பிட்ட அளவிலான பசுந்தேயிலை மட்டுமே தொழிற்சாலைகள் கொள்முதல் செய்து வருகிறது. வரும் நாட்களில் பசுந்தேயிலை வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kunda , Kunda area, factory, production, intensity
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...