சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: பாடநூல் நிறுவன தலைவராக கல்வியாளரை நியமிக்க வேண்டும் எனவும், லியோனியை வாபஸ் பெற வேண்டும் எனவும் ராமதாசும், அண்புமனியும் கூறுகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதியையும், தஞ்சாவூர் தங்கமுத்துவையும், கோடம்பாக்கம் குமாரையும், லியாகத் அலிகானையும் நியமித்தபோது ராமதாஸ், அன்புமணி தூங்கிக் கொண்டிருந்தீர்களா.
இவர்கள் எந்த பல்கலைகழகத்தின் பேராசிரியராக இருந்தவர்கள். லியோனியோ, டபுள் டிகிரி ஆசிரியர். ஆப்ரஹாம் லிங்கனுக்கும், அபிராமிக்கும் வித்தியாசம் தெரியாதவரை, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று சொன்னவரை முதல்வராக்குங்கள் என வாக்கு கேட்டவர்களுக்கு திமுக அரசின் செயல்பாடுகள் கோபத்தை தான் ஏற்படுத்தும்.
கோடம்பாக்கம் குமாரை விட சென்னை பாஷையில் கூவத்தை விட மோசமான வார்த்தைகள் பேசிட ஆள் உண்டா. பெண் மீது ஆசிட் ஊற்றலாம். பெண்ணை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து உதைத்து விட்டு மாவட்ட செயலாளராக இருக்கலாம். இவைகளுக்கெல்லாம் ராமதாஸ் வாய்திறக்க மாட்டார். பாடநூல் தலைவர்களில் ஆசிரியர் ஒருவர் தலைவரானது, ஆசிரியர் இனத்திற்கே பெருமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.