புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி மொத்தமாக விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘உயர் நீதிமன்றங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்,’’ என்றார். இதை நிராகரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் இப்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை, மேலும், இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குகளுடன் சேர்த்து ஒன்றிய அரசின் மனுவும் வரும் 16ம் தேதி விசாரிக்கப்படும்,’ என உத்தரவிட்டனர்.