சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது, அவர்களாக போட்டுக் கொண்டுள்ளனர் என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் தலைமையைக் கட்சித் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்று சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த சசிகலா சென்னை திரும்பிய பிறகு அரசியலிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
சசிகலாவின் இடையூறுகள் ஏதும் இன்றி அதிமுக தேர்தலை சந்தித்தது. தேர்தலில் அதிமுக தோற்று விட்டதால் தற்போது கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சசிகலா. அதன் ஒரு பகுதியாக அதிமுக தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சசிகலாவுடன் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமில்லை.
சசிகலாவின் கனவு பலிக்காது என்று அதிரடியாக பேசினார். இந்த நிலையில், எடப்பாடியை சீண்டுவது போல சசிகலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அப்படி ஒரு பதவியே இல்லை. இவர்களே போட்டுக் கொள்கிறார்கள் என்று அந்த ஆடியோவில் கூறுகிறார். மேலும், கட்சியின் தலைமையை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் தொண்டர்களின் துணையோடு எல்லாவற்றையும் மாற்றுவேன் என்றும் கூறுகிறார்.