×

இந்திய அரசுடனான வரி பிரச்சனை : பிரான்சில் ரூ.176 கோடி மதிப்பிலான இந்திய அரசின் 20 சொத்துக்கள் முடக்கம்!!

பாரீஸ் : எண்ணெய் நிறுவனத்திற்கான வரி விதிப்பு சர்ச்சை தொடர்பாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்திய அரசிற்கு சொந்தமான 176 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2006 மற்றும் 2007ம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனெர்ஜி தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மாற்றியது. ஆனால் இந்த பங்குகளை மாற்றியதால் முதலீட்டு ஆதாயத்தை கெய்ர்ன் இந்தியா அடைந்துள்ளதாக கூறி அந்த நிறுவனத்திற்கு ரூ.10,247 கோடி வரி விதித்து இந்திய வருமான வரித்துறை ஆணையிட்டது.

தொடர்ந்து 2012ல் அந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியும் அந்நிறுவன பங்குகளை விற்றும் வரி வசூலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு விதித்த வரி விதிப்பிற்கு எதிராக கெய்ர்ன் நிறுவனம் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சில ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு இந்த விவகாரம் வரி பிரச்சனை அல்ல முதலீடு தொடர்பானது என்றும் ரூ.10,247 கோடி வரி விதித்தது நியாயமில்லை என்றும் கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கெய்ர்ன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.12,700 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.இப்பிரச்சனையில் உரிய தீர்வு கிடைக்காமல் போனதால் இந்திய அரசின் சொத்துக்களை முடக்கி இழப்பை ஈடு செய்ய கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.இதன்படி பிரான்ஸ் தலைநகர் பாரீஸுல் உள்ள ரூ.176 கோடி மதிப்பிலான இந்திய அரசின் 20 சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சொத்து முடக்கம் தொடர்பாக இதுவரை எவ்வித நோட்டீஸோ நீதிமன்ற உத்தரவோ தங்களுக்கு வரவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags : Government of India ,France , எண்ணெய்
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...