சென்னை: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக ஒன்றிய அமைச்சர் ஒருவரின் பெயரை கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் போலீசார் 2 பாஜ நிர்வாகிகள் மீது பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஜெயலட்சமி நகரை சேர்ந்தவர் புவனேஷ்குமார்(56). இவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் பாஜ பிரமுகர் என்பதால், அடிக்கடி சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்க வந்து செல்வேன். அப்போது பாஜ நிர்வாகிகளான விஜயராமன் மற்றும் ரகோத்தமன் ஆகியோர் பழக்கம் கிடைத்தது. நடந்து முடிந்து 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடும் நபர்கள் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டது.
அப்போது திருவண்ணாமலை தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டுக்காக எனது சித்தப்பா மகள் வசந்திக்கு சீட்டு கேட்டு தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தோம். அப்போது இரண்டு நிர்வாகிகளும் என்னிடம், எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி மிகவும் பழக்கமானவர் இதனால் உங்களுக்கு திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். அதற்காக ரூ.50 லட்சம் பணம் கேட்டனர். உறுதியாக சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.50 லட்சம் பணத்தை இருவருடம் தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வைத்து கொடுத்தேன். ஆனால் இருவரும் சொன்னப்படி எங்களுக்கு சீட்டு வாங்கி கொடுக்க வில்லை.
பின்னர் நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, விஜயராமன் மற்றும் ரகோத்தமன் ஆகியோர் முறையாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பாஜ நிர்வாகிகள் இரண்டு பேரிடம் இருந்து ரூ. 50 லட்சம் பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த புகாரின் படி பாண்டி பஜார் போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் இருவரும் எல்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பாஜக நிர்வாகிகளான விஜயராமன் மற்றும் ரகோத்தமன் மீது போலீசார் மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி மிகவும் பழக்கமானவர் உங்களுக்கு திருவண்ணாமலை தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருகிறேன்.