சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தரமில்லாத சாலைகளை அமைத்ததாக 3 பொறியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் ஆண்டச்சியூரணி - ஓட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு புகார் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் சாலையை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தரமற்ற சாலைகளை அமைத்த அலுவலர்களான உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அண்ட் கோ-வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தரமற்ற சாலையை அமைத்தவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நடைமுறை என்பது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் சம்பவமாக நடைபெற்றிருகிறது.