×

கைதான 2 பேர் திடுக்கிடும் தகவல் தூத்துக்குடியில் மேலும் ஒரு வெடிகுண்டு மீட்பு

தூத்துக்குடி :  தூத்துக்குடியில் நேற்று மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள கோமஸ்புரம் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் அருகே நேற்று முன்தினம் நாட்டு வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த கொம்பையா மகன் முருகன் என்ற யமகா முருகன் (38) மற்றும் 1வது ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்  மகன் ஜான்சன் பெலிக்ஸ் (25) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் முத்து, ஆனந்த் ஆகிய இருவரை தேடி வந்தனர். இதற்கிடையே தூத்துக்குடி ராஜபாண்டிநகரில் ஒரு வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ஒரு பெண் அளித்த தகவலின் பேரில் மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 வெடிகுண்டு வழக்கில் பிடிபட்டுள்ள யமகா முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. யமகா முருகனுக்கும், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இருவரும் கூலிப்படை மற்றும் நண்பர்கள் உதவியுடன் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட முயற்சித்துள்ளனர். அதற்காக யமகா முருகன் தனது தற்காப்பிற்காக வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார்.

5 வெடிகுண்டுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரித்த அவர் பயிற்சிக்காக குப்பை மேடு பகுதியில் 2 வெடிகுண்டுகளை வீசி வெடித்து பார்த்துள்ளார். மேலும் ஒரு வெடிகுண்டை தனது நண்பர் ஓருவருக்கு வழங்கியுள்ளார். அந்த நண்பர் சமீபத்தில் நடந்த தனது பிறந்தநாளின் போது அரிவாளால் கேக் வெட்டி வெடிகுண்டை வெடித்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

மேலும் இரு வெடிகுண்டுகளை பத்திரமாக நண்பர்கள் இருவரிடம் தனித்தனியே கொடுத்து பதுக்கி வைத்துள்ளார். அந்த நண்பர்களின் குடும்பத்தினர் மூலம் தான் இந்த வெடிகுண்டு தகவல்கள் அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடியில் சுமார் 2 மாத காலமாக உலா வந்துள்ள இந்த நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் சிலர் தற்போது வேறு வழக்குகளில் கைதாகி சிறையிலும் உள்ளனர். தூத்துக்குடியில் கஞ்சா, கூலிப்படை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வெடிகுண்டும் பிடிபட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Thoothukudi , Thoothukudi, Country bomb,2 persons Arrested,Police
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...