ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கடந்த மாதம் 24ம் தேதி ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டத்தில், அனைத்து தலைவர்களும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இந்நிலையில், குப்கர் கூட்டணி தலைவர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில், ‘‘டெல்லியில் நடந்த பிரதமர் மோடி உடனான கூட்டம் ஏமாற்றம் அளிக்கிறது. இதில் கணிசமான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் இல்லை. அக்கூட்டத்தால் எந்த பிரயோஜமும் இல்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பின்னரே சட்டப்பேரவை தேர்தல்நடத்த வேண்டும் என்பதில் குப்கர் கூட்டணி உறுதியாக உள்ளது’’ என்று தெரிவித்தனர்.